Skip to content
Reviews

தளிர் – நாவல் அறிமுகம்

December 23, 20221 second read
சென்னை புத்தகக் காட்சிக்கு வரப் போகும் #தளிர் நாவல் அறிமுகம்.
நன்றி Pa Raghavan சார்.
பல வருடங்களுக்கு முன்பு மெல்லினம் என்றொரு நாவலை எழுதினேன். கல்கியில் அது தொடராக வந்தது. இரண்டு குழந்தைகள். ஒரு நாய். ஒரு குரங்கு. ஓர் அணில். ஒன்றிரண்டு பட்டாம்பூச்சிகள். இவ்வளவுதான் கதாபாத்திரங்கள். வாரப் பத்திரிகையில் இம்மாதிரியான கதையெல்லாம் எடுபடுமா என்று அங்கே யாரும் சந்தேகப்படவில்லை. வெளியாகி முடிந்ததும் வாசகர்களும் தலைமேல் வைத்துக் கொண்டாடித் தீர்த்தார்கள். (இன்றைய எனது எடையில் சுமார் பத்து கிலோ அப்போது ஏறியதாக இருக்கும்.)
அது ஒரு சிறிய சூட்சுமம்தான். குழந்தைகளை வைத்துக்கொண்டு பெரியவர்களுக்குக் கதை சொல்லும்போது குழந்தைத்தனமாக ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வது ஒன்றுதான் பணி. அதைச் சரியாகச் செய்தால் போதும். வென்றுவிடும். மெல்லினத்துக்குப் பிறகு அம்மாதிரியான முயற்சிகள் ஒன்றிரண்டு நடந்தன. பெரிய அளவில் எடுபடவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு இப்போது குழந்தைகளின் உலகத்தில் இருந்து பெரியவர்களுக்கு ஒரு கதையை எடுத்துத் தந்திருக்கிறார் நஸீமா ரஸாக். இது அவர் வாழும் வாழ்க்கை. அவர் அன்றாடம் புழங்கும் உலகம். அப்பா, அம்மா, புருஷன், மாமன், மச்சான், தம்பியென்று துபாயின் அனைத்துக் குறுக்குச் சந்துகளிலும் உறவினர்களையும் உலகெங்கும் நண்பர்களையும் கொண்டிருந்தாலும் தொட்டிச் செடி போல அவரை வளர்த்தது அந்தக் குழந்தைகள்தாம். தான் வளர்க்கும் தன் மகள்களினும் தன்னை வளர்த்த அக்குழந்தைகளின்மீது அவருக்குள்ள பாசத்தை நானறிவேன். எப்படியாவது ஒரு நாவலை எழுதிவிட வேண்டும் என்று என்னிடம் அவர் வந்தபோது அதைத்தான் சொன்னேன். கதையைத் தேடாதீர்கள். வாழ்க்கையை எழுதுங்கள்.
நஸீமாவின் தளிர், மெட்ராஸ் பேப்பருக்காக ஜீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியீடாக வரும் புத்தகக் காட்சியில் வெளியாகிறது. மெல்லினம் போலவே இது கொண்டாடப்படும் என்பது என் நம்பிக்கை. நாவலை எடிட் செய்த என் நண்பரும் என் மரியாதைக்குரிய எடிட்டர்களுள் ஒருவருமான பார்த்தசாரதி, வேலையை முடித்துவிட்டுச் சொன்ன சொற்கள் அதை உறுதிப்படுத்தின.
ஒன்று சொல்ல வேண்டும். ஒரு நாவலை எழுதி முடிக்கும்போது ஒவ்வோர் எழுத்தாளரும் அதை எப்படிக் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நானே இங்கே ஏகப்பட்ட கூத்தடித்திருக்கிறேன். ஆனால் நஸீமா தளிரை நிறைவு செய்த மகிழ்ச்சியை இன்னொரு புத்தகம் எழுதித்தான் கொண்டாடினார் (சூஃபி ஆகும் கலை).
இதனால்தான் எங்கள் குழுவில் அவரை நாங்கள் பேய் அல்லது பிசாசு என்று அழைக்கிறோம்.
அட்டை படம் வடிவமைப்பு P R Rajan .

Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Back To Top

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading