வித்தைத் தெரிந்தால் வெல்லலாம்! - Naseema Razak
16029
post-template-default,single,single-post,postid-16029,single-format-standard,ajax_fade,page_not_loaded,,qode-title-hidden,qode_grid_1300,qode-content-sidebar-responsive,qode-theme-ver-17.2,qode-theme-bridge,disabled_footer_top,qode_header_in_grid,wpb-js-composer js-comp-ver-7.9,vc_responsive

வித்தைத் தெரிந்தால் வெல்லலாம்!

வாழ்க்கைச் சம்பவங்களாலும் தொகுப்புகளாலும் ஆனது. இது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனா, நாம் எப்படி ஒவ்வொன்றையும் எதிர்கொள்ள வேண்டும் என்கிற தெளிவு எத்தனை பேருக்கு இருக்கிறது? அது தெரிந்திருந்தால் வெற்றி சுலபமாகிவிடும். வெற்றி ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் சூட்சுமம் அனைவருக்கும் ஒன்றே.”

அதற்கு ஒரு சின்ன சூத்திரத்தைத் தெரிந்து கொள்வது அவசியம். சுலபமாகத் தெரியும் பல விஷயங்கள் சுலபமானதாக இருக்காது. இந்தச் சூத்திரமும் அப்படியே.
E (Event- சம்பவங்கள்) + R (Response-கையாளும் திறன்) = O (outcome- விளைவு).

பார்க்க 1+1 = 2 போலத் தெரியும், ஆனால் இதைப் புரிந்து கொள்ளச் சிறிது மெனக்கெடல் வேண்டும்.
சம்பவங்கள் என்பது வெறும் சம்பவங்கள் அல்ல. அது எண்ணமாகக்கூட இருக்கலாம். ஒரு விஷயம் நடக்கிறது, உதாரணத்திற்குப் போக்குவரத்து நெரிசலில் நீங்கள் மாட்டிக் கொள்கிறீர்கள். உங்கள் வண்டி அங்குலம் அங்குலமாக நகர்கிறது. அது தினமும் நடக்கும் காட்சிதான். ஆனால் அனுதினம் அந்த நிகழ்வு உங்களை எரிச்சல் அடையச் செய்கிறது. இதுதான் ரெஸ்பான்ஸ்.

சம்பவமும் ரெஸ்பான்ஸும் சேர்ந்து விளைவை ஏற்படுத்துகிறது. எரிச்சல் அடைந்த நீங்கள் அலுவலகம் செல்கிறீர்கள். சின்னச் சின்ன விஷயமும் பூதாகரமாகத் தெரிகிறது. கோபம் வருகிறது. சுலபமான வேலையும் உங்கள் கைகளில் சின்னாபின்னமாகிறது. நீங்கள் சமநிலைக்கு வரும் வரை இது தொடரும்.

நம் ஒவ்வொருவரிடமும் ஒரு பாங்கு (Pattern) இருக்கிறது. ஒரு விஷயம் நடக்கிறது என்றால் அதை ஒரே மாதிரி எதிர்கொள்வோம். தெரிந்து எல்லாம் இல்லை. பழக்கத்தால் வந்தவை. அது மனதின் ஆழத்தில் பதிந்து போயிருக்கும் . உதாரணத்திற்கு, இக்கட்டான சூழலில் சுற்றி இருப்பவர்கள் மேல் கோபம் கொள்வது.

சம்பவங்களோ நிகழ்வுகளோ நம் கையில் இல்லை. ஆனால், அதை எப்படிக் கையாள்கிறோம் என்பது நம் கையில் மட்டும்தான் இருக்கிறது. அதைப் பொறுத்துத்தான் விளைவுகள் மாறுபடும்.

இதை எப்படிச் சரிசெய்யலாம் என்று பார்த்துவிடலாம்.

1. என்ன நடந்தாலும், ஒரு சின்ன இடைவெளிவிட்டுக் கையாள வேண்டும். முக்கியமாக எதிர்வினையாற்ற வேண்டும் என்றால் சில நொடிகள் பாஸ் பண்ணிவிடுங்கள். நான் என்ன ரோபோவா என்று நினைக்க வேண்டாம். இதெல்லாம் பழக்கத்தால் வசப்படும். வசப்பட்டால் நல்லது.

2. சூழலைப் புரிந்துகொள்ளுங்கள். அதன் வேர் வரை சென்று அலச மனம் தயாராக இருக்க வேண்டும்.

3. ஒவ்வொரு முறையும் நான் இப்படித்தான் எதிர்வினை செய்கிறேன் என்று முதலில் நமக்குள் ஒரு புரிதல் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தெளிவு கிடைக்கும். அலுவலகத்தில் நடக்கும் சில கசப்புகளை வீடு வரை கொண்டு வந்து வீட்டாரிடம் எரிச்சலைக் காட்டுகிறோம் என்று முதலில் நமக்கு உரைக்க வேண்டும்.

4. வரும் கோபத்தை அல்லது எரிச்சலை, அல்லது ஏதோ ஒரு தேவையற்ற பழக்கத்தை மடைமாற்ற வேறு என்ன செய்யலாம் என்று நாம்தான் முடிவெடுக்க வேண்டும்.

5. இனி நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்வேன் என்கிற முடிவு மாத இறுதியில் கடன் வாங்காமல் இருக்க உதவும்.

6. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் மற்றவர் மேல் பழி சுமத்துவது உதவாது என்கிற புரிதல் வர வேண்டும். உங்களுக்கு எது நடந்திருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பு நீங்கள் மட்டுமே.

7. உங்களுக்குக் கிடைக்கப் போகும் விளைவுகளை முன்பே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம்
எப்படிச் செயலில் ஈடுபட வேண்டும் என்கிற தெளிவு கிடைக்கும். உதாரணத்திற்கு உங்கள் நண்பரிடம் எதையோ புரிய வைக்க ஆரம்பிக்கும் பேச்சு, போகிறபோக்கில் வாதத்தில் முடிகிறது. நோக்கம் அது அல்ல. இருந்தாலும் எதற்காகப் பேச ஆரம்பித்தோம் என்று மறக்கும் அளவிற்கு உணர்ச்சி, விளைவுகளை மாற்றிவிடுகிறது.

8. எந்தச் சூழலுக்கு எப்படி நாம் ரியாக்ட் செய்யப் போகிறோம் என்பது ஒவ்வொரு முறையும் தெரிந்து இருக்க வேண்டும். முக்கியமாகச் சவாலான சூழல்களை நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்கிற விழிப்புணர்வு முக்கியம்.

9. கோபம், துயரம், வெறுப்பு, சோகம் எல்லாம் வந்து போகும் விருந்தாளிகள். அவர்கள் போகும் வரை கொஞ்சம் ஆறவிடுங்கள். அப்பொழுதுதான் சரியான வழியை மனம் கண்டுபிடிக்கும். பலனும் நிறைவு தரும்.

10. மனதை விழிப்புணர்வோடு வைக்க மேலே இருக்கும் வழிகளைப் பின்பற்றினால் தெளிவு வசப்படும். நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்!

சூழல்களின் மேல் எதைச் சுமத்தினாலும், வாழ்க்கையின் சுமையை நீங்கள் மட்டும்தான் சுமக்க வேண்டும். அதனால் சரியான செயல்களைச் செய்து சூழலை வென்று முடியுங்கள்!

No Comments

Post A Comment