Skip to content
Reviews

பொன் விளைந்த பூமி, வாசிப்பு – ராஜா ஹஸன்

January 17, 20243 second read

அமீரகத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் எழுத்தாளர் நஸீமா ரஸாக், துபாய் தேசம் உருவானதைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்.
இன்று உலகின் சொர்க்க புரியாகத் திகழும் துபாய் அந்த நிலையை எவ்வாறு அடைந்தது எண்ணைய் வளம் மிகவும் குன்றிய ஒரு நாடு .பிற அரபு தேசங்களை விட முன்னணியில் சொல்லப்போனால் உலகிலேயே முன்னேறிய நாடுகளில் துபாய் நகரம் இடம் பெற்ற விதம் குறித்த சரித்திர பூர்வ தகவல்களுடன் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

மணல் சூழ்ந்த அரேபிய நிலம் அதிலிருந்து நாடுகள் ,யூத, கிறிஸ்தவ மதங்களைத் தொடர்ந்து இஸ்லாம் பரவிய விதம் என பண்டைய வரலாற்றிலிருந்து துவங்கும் நூலாசிரியர் படிப்படியாக 1800களில் அந்த தேசங்களின் நில அமைப்பு வாழ்க்கை என்று எழுதிச் செல்கிறார்.
1800களில் கிழக்கிந்திய கம்பெனியினர் பம்பாயிலிருந்து பாஸ்லாவிற்கு செல்லும் கடல் வழியாக நிலப்பரப்பை கைப்பற்றுகின்றனர். அவர்களுக்கும் கடற்கொள்ளையர்களுடன் நடந்த போரில் குவாசிம்கள் தோற்கடிக்கப்படுகின்றனர்.

வளைகுடாவில் பிரிட்டிஷ் படையினரின் வருகை ஒரு பாசிட்டிவான வளர்ச்சி. துபாய் ஒரு புதிய வெளிப்புற சக்தியுடன் ஆக்கபூர்வமான உறவில் இணைகிறது.
வளைகுடா பாதுகாப்பு பகுதிகளான பஹ்ரைன் மற்றும் கத்தாரையும் சேர்த்து அமீரகம் இருக்கும் என்று பிரிட்டிஷார் எதிர்பார்க்கையில் ஐக்கிய அரபு கரையோரத்தில் இருக்கும் ஐந்து மிகச் சிறிய ஷேக் ராஜ்ஜியங்கள் ஒன்றாக அபுதாபி, துபாய் ,பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுடன் இணைந்து கூட்டு பிரதேசங்களாக செயல்பட துவக்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

1968 ல் தனது தனித்தன்மையை இழந்து விடுவோம் என பஹ்ரைன் நாடு நினைத்ததால் இணைப்பு சாத்தியப்படவில்லை..
பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு பஹ்ரைன் ,கத்தார் அமீரகத்தில் இணைய விரும்பாததால் ஏனைய ஏழு நாடுகள் ஒன்று சேர்ந்து 1971 டிசம்பரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிறந்தது.

அபுதாபியின் ஷேக் தலைமை ஏற்க அனைத்து ராஜ்யங்களும் இணைந்த கவுன்சில் ஒன்றுகூடி முடிவுகளை எடுத்த விதம் விவரிக்கப்பட்டுள்ளது.
வியாபாரம் ஒன்று மட்டுமே பொருளாதார ரீதியில் தமது நாட்டை மேம்படுத்தும் என்ற எண்ணிய துபாயின் மன்னர் ஷேக் மஹ்தூம் முடிவால் துபாயில் அரேபியர்கள், பாரசீகர்கள், இந்தியர்கள் ,மற்றும் பலூச்சிகள் என வெவ்வேறு நிலத்து மக்கள் ஒன்று கூடி வாழ ஆரம்பித்தார்கள்.
துபாயில் இலவச துறைமுகம் ஒரு பக்கம் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வாய்ப்பாக இருந்தது.
ஷேக் ராஷீத் அவர்களின் மேற்பார்வையில் அடுத்தடுத்த வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்தார்கள்.

மன்னர் மனதில் துபாயை முக்கிய கேந்திரமாக மாற்றுவதற்கான அனைத்து பரிமாணங்களையும் யோசிக்க ஆரம்பிக்கிறார் .
1940களில் ஷார்ஜாவில் மட்டும் ஒரு சிறிய விமான நிலையம் இருந்த நிலையில் கப்பல் போக்குவரத்து தவிர விமான போக்குவரத்து அரிதான காலகட்டத்தில் தமக்கென்று சொந்தமாக விமான நிலையம் வேண்டும் என்று துபாயில் விமான நிலைய பணிகளை 1950 களில் ஆரம்பிக்கிறார்.
ஆரம்ப கட்டத்தில் விமான நிறுவனங்கள் துபாயில் தரையிறங்க மறுத்தன .அந்த அளவுக்கு பயணிகள் இருக்கைகள் நிரம்பாது என்ற காரணத்தை அவர்கள் முன்னெடுத்தனர் ஷேக் அவர்கள் இருக்கைகள் அனைத்தையும் தாமே வாங்கிக் கொள்வதாக அறிவித்து அதற்கான முயற்சிகளை செய்ததில் விமான நிறுவனங்கள் சம்மதித்து துபாயில் தரையிறங்க ஆரம்பித்ததை வாசிக்கையில் வியப்புக்கு உள்ளாகிறோம்.
அடுத்த கட்டமாக வணிகத் தேவைக்காக சொந்தமாக வங்கியை நிறுவிய வரலாறுகள்..
மற்ற அரபு நாடுகளை விட துபாயில் எண்ணெய் வளம் குறைவு.

1970களில் பிரம்ம பிரயத்தன முயற்சிகளுக்குப் பிறகு குறைவான எண்ணெய் எடுக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் ஒரு அதிசய பொருள். அது எவ்விதம் கிடைத்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னுக்கு கொண்டு வரும். அவ்வகையில் துபாயின் பொருளாதாரம் சிறிது சிறிதாக மேம்பட ஆரம்பித்தது..
அடுத்த கட்டமாக நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சி.

துபாயையும் அபுதாபியையும் இணைக்கும் வகையில் நீண்ட சாலை போடப்பட்டது. துபாயின் ஆட்சியாளர் பெயர் அபுதாபி சாலைக்கும் அபுதாபியை ஆள்பவரின் பெயர் துபாய் சாலைக்கும் வைக்கப்பட்டது வரலாறு.
ஆங்காங்கே இருந்த சிற்றோடையின் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன.
சரக்கு வாகனங்கள் துறைமுகத்தை விரைவில் சென்றடைவதற்காக தனியாக வசதிகள் அமைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லை விமான நிலைய ரன்வேயின் கீழே அகலமான சாலைகளும் சுரங்கப் பாதைகளும் அமைக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகரிக்கையில் குடிநீருக்கு என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது.
துபாய் நகருக்கு தெற்கே 15 மைல் தொலைவில் அல் அவீர் என்ற இடத்தில் ஒரு நன்னீர் நீர் நிலையை கண்டுபிடிக்கின்றனர். நிலத்தடி நீர் குழாய்கள் மூலம் துபாய் நகருக்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறாக ஒவ்வொன்றாக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்த அதே நேரத்தில், வரி, சிகப்பு நாடாத்தனம் போன்றவைகளில் வணிகர்களை சிக்க வைக்காமல் வரியில்லா துறைமுகம், ஏர்போர்ட் என்ற வசதிகள் 85 களில் பெருக ஆரம்பிக்கின்றன .
அந்த காலகட்டத்தில் துபாயில் நல்ல நட்சத்திர விடுதி கிடையாது. உடனடியாக விடுதிகள் கட்டப்படுகின்றன..
அவ்வாறே துபாய்க்கு என்று பிரத்தியேகமாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமும் துவக்கப்படுகின்றன .இன்று உலகின் நம்பர் ஒன் விமான நிறுவனமாக எமிரேட்ஸ் உள்ளது.

அனைத்து பொருளாதரங்களும் உள்கட்டமைப்பிலேயே முதலீடு செய்யப்படுகின்றன .துபாயின் வெற்று கடற்கரையான ஜெபல் அலி என்னும் இடத்தில் மெகா துறைமுகம் கட்டும் திட்டத்தை முன்னெடுக்கிறார்கள்..
துபாய் இன்று மிடில் ஈஸ்ட் வர்த்தகத்தின் நம்பர் ஒன் நகரம் .
மிகப்பெரிய துறைமுகம் மற்றும் விமான நிலையம் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு கம்பெனிகளின் இருப்பு ஷேக் ராஷீத்தின் தொலைநோக்கு பார்வையும் அவரின் கனவுகளும் இன்றைய துபாய்க்கு மிகப்பெரிய பலம்.

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர வேண்டும் என்பதற்காக பெரிய பெரிய மால்கள் உணவகங்கள் கட்டப்படுகின்றன.. இவை குறித்து நஸீமா ரசாக் விரிவாக எழுதியுள்ளார் அதைப்போல் துபாயின் ரியல் எஸ்டேட் எவ்விதம் செயல்படுகிறது.. அமெரிக்காவின் லாஸ் வேகாசிற்கு அடுத்தபடியாக இன்று உலகப் பட்டியலில் துபாய் ரியல் எஸ்டேட்டில் முன்னணியில் அறியப்படுகிறது..
புர்ஜ் கலீஃபா என்னும் உலகின் உயரமான கட்டிடம் கட்டப்படும் பொழுது எழுந்த நெகட்டிவ் விமர்சனங்கள் ..
‘இது ஒரு வெள்ளை யானை ப்ராஜெக்ட் ..சரிவராது’ என்று பேசப்பட்ட நிலையில் அது எவ்வாறு முழுமை அடைந்தது என்பதை இரண்டு அத்தியாயங்களில் விரிவாக காண்கிறோம்..

“அந்தச் செல்லத்தை தூக்கி வாங்கப்பா” என்று படத்தில் சொல்வது போல் திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்கள் துபாய்க்கு அழைத்து வரப்படுகிறார்கள். அந்த வகையில் உலகின் மிகச்சிறந்த ஆர்கிடெக்டுகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் கூட்டு முயற்சியே வானாளாவிய கட்டிடம்.
துபாயை ஆண்ட ஷேக்குகளின் சந்ததியில் ஷேக் முகமது குறித்த அத்தியாயத்தில் அவர் எந்த அளவுக்கு மக்களுடன் இணைந்து பணியாற்றி, வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் அவருடைய நிர்வாகத் திறமை குறித்த தகவல்கள் யாவும் வியப்பூட்டுகின்றன.
ஆசிரியர் சொல்வது போல ‘எல்லாம் இருக்கும் பல தேசங்கள் ஆட்சியாளர் சரியாக அமையாததால் அழிவை சந்திக்கின்றன. உதாரணமாக சிரியா, இலங்கை ஈரான் என சொல்லலாம். ஆனால் எமிரேட்ஸ் ஆட்சியாளர்கள் ஒன்றும் இல்லாமல் உயரத்தை தொட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்பதில் சந்தேகமில்லை.
பழைய சங்கதிகளை சொல்வதுடன் இல்லாமல் இந்த நூலில் சமீபத்திய அசுரன் ,அரக்கன் ,கோவிட் நோய் தொற்று காலத்தில் துபாய் மீண்டெழுந்த கதையை மிகவும் அருமையாக நமக்கு சொல்கிறார்.

சுற்றுலா பயணிகளையே வருமானமாக கொண்ட ஒரு தேசம் பெருந்தொற்றின் காரணமாக முடக்கப்படும் போது சந்திக்கும் நஷ்டம். பொருளாதார சிரமங்களிலிருந்து வெளிவந்த தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன.
எமிரேட்ஸ் விமான நிறுவனம் பில்லியன் டாலர்களில் நஷ்டத்தை சந்தித்த பொழுது அரசு தலையிட்டு அந்த நஷ்டத்தை ஈடு செய்து மீண்டும் லாப நோக்கில் செயல்பட வைத்ததெல்லாம் மிகப்பெரிய முன்னெடுப்பு…

ஷேக் முகமது அவர்களின் மகனார் ஷேக் ஹம்தன் இன்றைய பட்டத்து இளவரசர்.. துபாய் எக்ஸ்போ கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தியதன் மூலம் அவருடைய நிர்வாகத் திறமை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி பரிமளிக்க செய்கின்றன.
பாலைவனத்தின் மீன்பிடி கிராமம் துபாய் என்கிற மணல்பிரதேசம் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாக உருமாறிய வரலாற்றை ஆசிரியர் நஸீமா ரஸாக் தெளிவான தரவுகளுடன், சுவாரசியமான எழுத்து நடையில் அபாரமாக விளக்கியுள்ளார்.
வரலாற்று ஆர்வம் மிக்கவர்கள் மட்டுமல்லாது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இந்த ‘பொன் விளைந்த பூமி’.

நன்றி ராஜா ஹஸன்.

 

புத்தகம் வாங்க

http://tinyurl.com/Pon-Vilaindha-Bhoomi


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

1 Comment

Comments (1)

  1. நல்லதொரு திராணாய்வு.

    கருவுற்று, பிறந்து,
    தவழ்ந்து, இளமையை எட்டுகிற , குழந்தையின் வளர்ச்சி நிலையென

    ஒரு தேசத்தையே கண்முன் நிறுத்துகிறது.

    நிலப்பரப்பின் தன்மை , அதைச் சுற்றி அமைந்துள்ள நாடுகள் , பொருளாதார கட்டமைப்பு, ஆக்கமுற்சிகள், அரசு நிர்வாகம் என்ற பரவலான நுண்பார்வை
    ஒரு புதிய முயற்சியே.

    அன்றிலிருந்து இன்று வரை இருந்து கொண்டுள்ள மக்களின் சமூக பண்பாட்டு கலாச்சார நிலை மாற்றங்கள் மற்றும் வளர்ச்சி பற்றியும் எழுதப்பட்டிருக்கக்கூடும் என்றே
    நம்புகிறோம்.

Comments are closed.

Back To Top
error: Content is protected !!

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading