Skip to content
Reviews

தோற்றாலும் விடமாட்டேன் – கமலா முரளி மதிப்புரை

May 24, 20250 second read

மெட்ராஸ் பேப்பர் இதழின் உதவி ஆசிரியர், நஸீமா ரஸாக், தமிழ்நாட்டில் திருக்கோவிலூரில் பிறந்து, தற்போது துபாயில் வசித்து வருகிறார். மௌலா, துபாய் விசா பகுதி 1 மற்றும் பகுதி 2, தளிர், மராம்பு, என்னைத் தேடி, பொன் விளைந்த பூமி உள்ளிட்ட பதினொரு புத்தகங்கள் வெளிவந்துள்ளன. இந்து தமிழ் திசையில் இவரது கட்டுரைகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நஸீமா ரஸாக் அவர்களது ”தோற்றாலும் விடமாட்டேன்” கட்டுரைத் தொகுப்பு நாற்பது கட்டுரைகளைக் கொண்டுள்ளது. தோல்விகள் எத்துனை வந்தாலும், மனந்தளராது, விடா முயற்சியுடன் தங்கள் இலக்கை நோக்கிப் பயணித்த உலக அளவிலான நாற்பது சாதனையாளர்களைப் பற்றிய நூல்.

சாதனையாளர்களைப் பற்றிய தகவல்களை அள்ளித் தரும் தகவல் திரட்டு அல்ல இந்த நூல்.
ஒரு சாதனையாளர் எந்த ஆண்டு பிறந்தார், எங்கு எப்போது படித்தார் அல்லது அவருக்குக் கிடைத்த அங்கிகாரங்களின் பட்டியல் போன்ற புள்ளி விவரங்களால் பக்கங்கள் நிரப்பப்படவில்லை.

அதே சமயத்தில், ஒவ்வொருவருடைய வாழ்வின் முக்கியத் தருணங்களை, உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். அவர்கள் எதிர் கொண்ட சவால்கள், அவர்களது வேதனைகள், திடமான உறுதியுடன் , விடாமுயற்சியுடன், தோற்றாலும் விடமாட்டேன் என்ற தீர்மானத்துடன் அவர்கள் செயல்பட்டதை மிகச் சிறப்பாக வெளிக் கொணர்ந்து உள்ளார்.
கட்டுரைகளின் நீளம் பற்றிக் குறிப்பிட வேண்டும்.ஆசிரியர் எடுத்துக் கொண்டு இருக்கும் சாதனையாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் தனித்தனியாக ஒரு நூலே எழுதலாம். இருப்பினும், அவர்களது வாழ்வின் முக்கியத் தருணங்களையும் குறிப்பிட்டு, அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் சொல்லி, தோல்வி மனப்பானமையை அறவே ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற நூலின் அடிப்படைக் கருத்தை ஆழமாக வலியுறுத்தி… இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவை அனைத்தையும் சிறிய கட்டுரைகள் வாயிலாகத் தந்துள்ளார்.
தொய்வில்லாமல் , சுவாரசியத்துடன் படிக்க இந்த “சுருங்கச் சொல்லும்” உத்தி உதவுகிறது என்றால் மிகை ஆகாது.
அத்தியாயங்களின் தலைப்புகள் சாதனையாளர்களின் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் உள்ளன. ஓரிரு அத்தியாயங்களுக்கு மட்டுமே சாதனையாளரின் பெயரே தலைப்பாக உள்ளது.

சாதனையாளரின் கோணத்தில், சாதனையாளரே பேசுவது போல் (First Person Narrative) அமைந்திருப்பது மிகச் சிறப்பு. சிறப்பானதொரு கதை சொல்லும் உத்தி அல்லவா ! வாசகரை, சாதனையாளருடன் பொருந்தி இருக்க வைக்கிறது இந்த உத்தி!

பத்து பெண் சாதனையாளர்கள் மற்றும் முப்பது ஆண் சாதனையாளர்கள் பற்றி நூல் விவரிக்கிறது.
அறிவியல் ( இயற்பியல், கணிதவியல்), கால்பந்து, இணைய வர்த்தகம், வணிகம், தொழில் நிறுவன முனைவர்கள், கிரிக்கெட், கார்ட்டூன் – அனிமேஷன், குத்துச்சண்டை, தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், எழுத்தாளர் ( புதினம், குழந்தை எழுத்தாளர், மர்மக் கதை, கவிஞர் ) இசை, நடனம், நடிப்பு, கணினித் துறை, உணவுத் தொழில், அரசியல், கூடைப்பந்து, சிறு மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள், ஓட்டப் பந்தயம், பால் உற்பத்திப் பொருள், உடற்கலை வல்லுநர், மலையேற்ற வீரர், கதை சொல்லி, ஊக்கமூட்டும் சொற்பொழிவாளர்…. எத்துணை துறைகள் !
எந்தத் துறையாக இருந்தாலும், நிராகரிப்பு, தோல்வி, துரோகம் முதலியவற்றைக் கடந்து, துணிவுடன், தொடர்ந்து முயற்சிப்போருக்கு வெற்றி நிச்சயம் எனக் கட்டியம் கூறுகிறது இந்நூல்.

என்னைக் கவர்ந்த தலைப்புகள் : கருந்துளையின் காதலன், கோழி அரசன், துணை வந்த செயற்கைக் கால், மரண தண்டனை.

ஒரு சில கட்டுரைகள் பற்றி:

கூடைப் பந்துத் தலைவன் : இக்கட்டுரை ”ஹிஸ் ஏர்னெஸ்” என அறியப் படும் மைக்கேல் ஜோர்டான் பற்றியது.

// தோல்விகளை மட்டுமே அதிகமாக சந்தித்தவர்கள் என்று ஒரு பட்டியல் தயாரித்தால் முதல் பெயர் என்னுடையதாகத் தான் இருக்கும்.// எனத் தொடங்குகிறது ஜோர்டனின் அத்தியாயம்.
பள்ளியில் மிக அருமையாக விளையாடினாலும், குழுவில் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. ஏனெனில், அவரது உயரம் குறைவு! அந்த நிராகரிப்பையும் தோல்வியையும் சீரணித்து ஜூனியர் மாணவர் குழுவில் இணைந்தார். உயரத்தை அதிகரிக்க உணவு பயிற்சி என முயற்சி செய்தார். வாய்ப்பு கிடைத்து விளையாடத் துவங்கும் நேரம் காலில் அடி. அதனால், சரியான பருவத்தில் பல வாய்ப்புகளை இழந்தார். மீண்டும் விளையாடத் துவங்கிய போதும் சரியான கட்டங்களில் புள்ளிகளை எடுக்காமல், ஒன்பதாயிரம் முறை சிறப்பாக ஆடத் தவறி உள்ளதாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் தோல்வி, அவமானங்கள், குற்ற உணர்வு. ஆனால், கூடைப்பந்து விளையாட்டில் முக்கிய இடத்தை அடைந்தார். விளம்பரங்கள், நிர்வாகம் என பல களங்களைக் கண்டார். நிராகரிப்புகளையும் வலிகளையும் பயிற்சிக்கு உரமாக மாற்றியதால் வெற்றி சாத்தியமாகியது.

முதுகில் ‘ஏழு’ இலக்கமிட்ட ஜெர்ஸியைப் பார்த்தாலே வெறி கொள்ளும் ரசிகர் கூட்டம் உலகம் முழுதும் ! கால் பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றியது ”ரியல் மேட்ரிட்” கட்டுரை.
பெற்றோர்களால் ஒரு பந்தைக் கூட வாங்கித் தர முடியாத நிலை. பிற மாணவர்கள் ரொனால்டோவின் வறுமையைப் பரிகசித்தனர். இங்கேயே இருந்தால் மீன்காரனாகத் தான் ஆக வேண்டும். நகரத்துக்குச் சென்று கால்பந்து பயின்றால் குடும்பமே உயரும் என தந்தை சொல்ல, நகரம் நோக்கிச் சென்றார்.
ஆனால், பதினைந்து வயதில் ரொனால்டோவுக்கு இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை மற்றும் ஓய்வுக்குப் பின் மீண்டும் களத்தில் ரொனால்டோ!
மேன்செஸ்டர் அணியை எதிர்த்து விளையாடிய ரொனல்டோவை அந்த அமைப்பே நூற்றியெழு மில்லியன் டாலர் கொடுத்து ஓப்பந்தம் செய்தது. பிரபலமான ஏழாம் எண் ஜெர்ஸியை அவருக்குக் கொடுத்த போது சக வீரர்கள் விரும்பவில்லை.

பல தோல்விகள், மூட்டு வலி, ஆட வேண்டிய மைதானத்திலேயே பார்வையாளனாக இருந்த சூழல் என பல வலிகளைத் தாங்கித் தான் வெற்றி பெற்றுள்ளார் ரொனால்டோ.
கால்களை இழந்தும் தம் துறையில் கால் பதித்து வெற்றிக் கொடி நாட்டிய ’மயூரி’ சுதா மற்றும் மலையேற்ற வீராங்கனை அருணிமா பற்றிய கட்டுரைகள் சிறப்பு.
பஜ்ஜி வியாபாரமும் செய்து இருக்கிறார், ஜவுளி வியாபாரமும் செய்து இருக்கிறார் திருபாய் அம்பானி. அடிபட்டு, அசிங்கப்பட்டு வாழ்வில் உயர்ந்தார்.
தலித் பெண்மணி கல்பனா சரோஜ், பாப் இசைக் கலைஞர் லேடி காகா மற்றும் பேச்சாளர் நிக் வுஜிசிக் கதைகள் நம்மை எழுச்சியுறச் செய்யும்.
//வெற்றி அழகானது. ஆனால், தோல்விகள்தாம் அர்த்தமுள்ளவை//

சாதித்தவர்களின் சறுக்கல் புள்ளிகளையும் தவறுகளையும் கண்டறிந்து, திருத்திக் கொண்டு அவர்கள் மேலே ஏறி உச்சம் தொட்ட விதத்தை இந்நூல் விவரிக்கிறது.
அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.

கமலா முரளி


Discover more from Naseema Razak

Subscribe to get the latest posts sent to your email.

Share this Article
Further Reading
Trending Articles

No Comments

Comments (0)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top

Discover more from Naseema Razak

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading